வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நக்கீரனின் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியீடு!

நக்கீரன் கல ஆய்வு!



சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள 2ம் கட்ட கருத்துக் கணிப்பின்படி 117 தொகுதிகளில், திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.


தமிழ்நாட்டின் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல் முடிவுகளை மிகச் சரியாக வெளியிட்டு வரும் இதழ் நக்கீரன்.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள் , வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

அந்தக் கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

234ல் பாதி தொகுதிகளான, 117 தொகுதிகளின் முடிவை இப்போது நக்கீரன் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் விவரம்:





 

இதன் படி திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

திமுக கூட்டணியில் திமுக 45 இடங்களிலும், காங்கிரஸ்  11 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 38 இடங்களி்லும், தேமுதிக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களி்லும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், மனித நேய மக்கள் கட்சி 1 இடத்திலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் முன்னணியில் உள்ளன.

மேலும் 117 தொகுதிகளின் முடிவுகள் அடுத்த இதழில் வெளியிடப்படும் என்று நக்கீரன் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவான அலையும் இல்லை, எதிரான சுனாமியும் இல்லை என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக நக்கீரன் கூறியுள்ளது.


நன்றி : தட்ஸ் தமிழ் மற்றும் நக்கீரன் குழு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP